Sunday 11 December 2011

கவிதைக் கதம்பம்

மார்கழி

கொட்டும் பனியில் குளிர்நடுக்கும்
கட்டுக் கடங்கா புகைமறைக்கும்
ஓட்டும் உடையில் உடல்சிலிர்க்கும்
ஒன்றும் உள்ளம் இணைசேர்க்கும்
தொட்டுத் தழுவும் மனம்களிக்கும்
தொடரும் இன்பம் இதழ்வார்க்கும்
விட்டக் குறையை நிறைவாக்கும்
விளையும் புதுமை வரவாக்கும்!


கனியும் பார்வை தேன்பொழிய
கைகளின் அணைப்பில் பூவிதழ்தன்
இனிய இதமே ஊனுருக்க
இன்பங் கோடி சேர்த்திங்கே
புனிதம் நிறையும் புன்னகையில்
பொதியும் உள்ளம் பொங்கிவர
தனிமை நீக்கும் உறவதுவாம்
தாயின் மடியோர் மார்கழியே!



வள்ளலார் காட்டும் வழி

அவலம் புலம்பஇ அறிவரும் பெருமை!
எவரும் புகழும் எளிமையின் இனிமை!
நெஞ்சறி வுறுத்தல் நிதமும் நிகழ்த்தல்
வஞ்சம் இலாத வடிவில் நிலைத்தல்
தரிசன வேட்கை தன்னில் ஆழ்தல்
விரியும் மனதில் வறியோர் நினைத்தல்
திருவடி புகழ்ச்சி தினமும் படைத்தல்
இருமை இரண்டின் இன்னல் களைதல்
அவாவ றுத்தல் அவனியைத் துறக்க
சிவாய மதிலே சிந்தையைச் சேர்க்க
இன்ப துன்பமும் இச்சக மாயையும்
ஆன்ம தரிசனம் அகத்தில் அழிக்கும்
கூடல் விழைந்தே கொடுக்கும் இலயத்தில்
தேடல் நின்றே தேனாய்ப் பெருகும்
திருவருள் விழைதல் துன்பந் தீர்க்க
அருட்பெருஞ் சோதியும் ஆட்கொள வருமே
கள்ளம் ஒழித்த காருண் யமதுவே
வள்ளல் பெருமான் காட்டிய வழியே!


கவிஞர் கி. பாரதிதாசனும் நானும்


கி. பாரதிதாசன் கவிதை :

சொல்வேந்தர் என்னும் சுடர்பட்டம் பெற்றொளிரப்
பல்வேந்தர் பாடிப் பறந்திடுவார்! - நல்லறிவைக்
கொள்வேந்தன்! அஞ்சா..மல்வேந்தன்! தமிழ்ப்பகையைக்
கொல்வேந்தன் என்றனுக்கேன் கூறு!

பதில் கவிதை :

பட்டங்கள் தான்விழைந்தேப் பாடிவரும் தாய்த்தமிழின்
விட்டத்தைத் தேடியிங்கு வெற்றிமாலைத் - தொட்டவரை!
சட்டமென எதுமில்லைச் சாற்றிடவே! நாள்தோறும்
பட்டயத்தில் நல்லறிவைப் போற்று!

பதிலுக்குப் பதில்:

பட்டம் பதவி பரிசுகளை நோக்கிநான்
திட்டம் இடுவதில்லை! சேர்வதில்லை - கொட்டமிட!
சட்டம் எனக்குண்டு! தன்னலம் எண்ணுகின்ற
மட்டம் இலாத மனம்!

பதிலுக்குப் பதிலுக்குப் பதில்:

மட்டம் இலாத மனமொன்றைத் தேடியே
திட்டம் வகுத்தேனும் திக்கெங்கும் - வட்டமிடும்!
கட்டுக் கடங்காத கற்பனைகள் உம்வழியே
எட்டும் கவிதைப் படைப்பு!

தொடர் கவிதை:

என்றன் கவிதைகள் ஏந்தி அணிந்திடும்
உன்றன் கவிதையை ஒண்மணியாய்க் - குன்றெனை
ஓங்கும் பெருமலையாய் ஓதும் உயர்வெண்ணித்
தாங்கும் தமிழைத் தரித்து!

தொடர் பதில் கவிதை:

வண்ண மலரின் மணமதை யேற்குமே
பின்னிய நாரும் பெருமிதம் - தன்னிலே!
உன்றன் கவியினுக் கொண்மணியாய் ஏந்திய
என்றன் கவிதையும் இனித்து!-(ராசி)

ஈற்றில் ஒருதலை ஏனோ தடையிடும் !
மாற்றிப் படைத்தால் மண்பெறும்-காற்றில்
பறக்கும் பறவையெனப் பாக்கள் பயணம் !
சிறக்கும் இனிமை செழித்து ! (பாரதி)

ஆர்வ அவசரம்இ ஆழ்ந்த கவனமிலா
பூர்த்தி செயலிலேப் பூசிடும் - குற்றமே !
ஆசிரியப் பண்பும் அதனையே மாற்றியிங்கு
வீசிடும் பாக்களின் மீது ! (ராசி)

சொல்லினிமை ! ஆற்றும் செயலினிமை ! தொண்டுளம்
நல்லினிமை ! நல்கும் மொழிநடை - மெல்லினிமை !
வல்லினிமை வண்டமிழில் வார்க்கும் கவிதைகள்
பல்லினிமை பாய்ச்சும் பணிந்து ! (பாரதி)

சொல்லினிமைக் கண்டுமே சொல்லவந்தப் பாராட்டைக்
கள்ளினிமை நான்பெறவே காட்டிவிட்டீர் - வல்லினிமை !
செந்தமிழின் நல்லினிமை சீர்மிகுந்தப் பாக்களிலே
விந்தை ! மயங்கும் மனம் ! (ராசி)


மாறும் மனமே!

தேவாதி தேவன் தீட்டும் திட்டம்
மேவும் பனியாய் மூடியே நிற்கும்!
மானிட வாழ்வு மாயை தனிலே
வீணிலே மயங்கி விழிப்பை மறக்கும்!
இன்பம் துன்பம் என்றே நாளும்
மன்பதை இடையே மாட்சி இழக்கும்!
தூக்கம் கலைத்திடத் தூயவன் துணிந்தால்
வாக்கும் நல்க, வாய்மையுஞ் சேரும்!
உலகப் பற்றினை உவந்தே தள்ளி
இலவம் பஞ்சென இகத்தை மாற்றி
வெற்றிடந் தன்னில் வேற்றுருக் காட்டி
சுற்றியே நின்று சொந்தம் தந்து
வீழும் போதில் விரைந்து தாங்கி
வாழும் நாளை மெய்த்தவம் ஆக்கி
தன்னை இழந்தே தகவை நோக்கி
மண்ணில் இருந்தே விண்ணை அடையும்
அருளும் பொழிந்து அறத்தில் நிலைக்கும்
கருப்பொருள் அறியும் கருணையும் ஈயும்!
தேறும் நினைவும் தேர்ந்த நிலையும்
மாறும் மனமும் மாதவன் கொடையே!


அரிய புத்திரன்:

அரியதொரு புத்திரனாம் ஆரணங்கே! சொல்லால்
விரித்தியம்ப வொண்ணுமோ வித்தகனை? வெல்லும்
கவிபடைத்துத் தாய்த்தமிழின் காவலனாய், வல்ல
புவிசிறக்கும் கற்றவனைப் போற்று!


சிவப் பிரகாசம்:

சிரிக்கின்ற கண்களிலே செம்மலர்போல் உவகையினால்
சிவப்பு மின்னும்!
உரிமையினால் குரலொன்று ஓங்கிவந்து செவியடைந்து
உறவைச் சொல்லும்!
பிரிவறியா உணர்வொன்று பாசமிகு பந்தத்தில்
பிணைந்து நிற்கும்!
வரிவரியாய் கண்ணதாசன் விதைத்துவிட்ட கோலங்கள்
வித்தை காட்டும்!

தலைக்குமேலே பணிவன்பு தூக்கிவிட்ட கரங்களிலே
தொன்மை பின்னும்!
கலைவிழாக்கள் பலவுண்டு காண்போரைக் கவர்ந்திடவே
காலம் காணும்!
சிலையெனவே தொடர்மனையாள் சொந்தத்தில் புன்னகையும்
சிந்தை சேரும்!
விலையிலாத நட்பதனின் வெளியுருவாய் உலவிவரும்
விந்தை பாரும்!

இத்தனையும் ஒருசேர இணைந்துவிட்ட ஓருருவே
இன்று இங்கே!
சத்தான வாழ்வொன்றைச் சாதனையாய் நடத்திவிட்டு
சான்று காட்டும்!
முத்தாகச் சுற்றிவரும் முக்கனியாம் செல்வங்கள்
முனைந்து தாங்க,
இத்தரையில் சிவப்பிரகாசம் இன்றுபோல சுடர்விட்டு
என்றும் வாழ்க!


அழியும் பூஞ்சோலை

மண்ணில் உதிக்கும் வண்ண மலராய்
கண்ணைக் கவரும் கவினுறு மழலை!
இறைவன் படைப்பில் இன்னிசைத் தென்றல்
மறையும் புன்னகை மாறா எழிலில்
குவளைக் கண்கள் குளுமைச் சாரல்
இவளின் தொடுகை இன்ப ஊறல்
குவிந்த இதழும் கொழித்த கன்னமும்
புவியில் எங்கும் பூக்கா அதிசயம்!
நெற்றிச் சுருக்கம் நெஞ்சில் வார்க்கும்
ஒற்றி எடுக்க வொட்டா கலக்கம்
ஏழு பிறவியும் எளிதாய் மாற்றும்
பூங்கொத் ததுபோல் பொலியும் கோலம்
ஈங்கவள் அணைக்க இன்பம் பெருகும்!
உடலின் வேட்கை உள்ளக் காமம்
கடலினும் பெருகிக் காற்றாய் அலைந்து
இணைவது ஒன்றே இங்குளத் தவமென
முனைவோர் மனமே முற்றும் கல்லாய்
உறவின் பயனாய் உருக்கொளும் உயிரை
பிறவித் துன்பம் பெருஞ்சுமை என்றே
தடுத்து நாளும் தானெனும் மமதை
அடுத்தே வளர்ந்து அழிக்கும் மலரை!
வண்ண மலரும் வாடி உதிர,
மண்ணில் சோலை இல்லா தொழியுமே!


உலகம் உன் கையில்

உலகம் உங்கள் கைகளிலே
உண்மை ஆயின் அதனழகு,
நிலவும் வன்மம், கொலைவெறியில்
ஞால மழிக்கும் மாசுதனில்
இலவம் பஞ்சாய்ப் பறந்திடாது
இன்பக் கோள இயற்கைதனை
உலவும் உயிராய்ப் பேணியிங்கே
உள்ள வரையில் காத்திடுவீர்!


உழைக்கும் இனம்

ஆதி மனித காலமுதல்
அவனி காகக்கும் ஓரினமே!
சாதி சமய வேற்றுமைகள்
சற்றும் பாரா ஓரினமே!
மோதி வரும் சங்கடங்கள்
முற்றும் களையும் ஓரினமே!
வீதி தோறும் அவருழைப்பே
விரிந்து நிற்கும் பாரினிலே!

வாழ்வின் மகுடம்



நீ உடல், உறவு இழந்து சென்றாய்
நான் உணர்வு, பந்தம் துறந்து வந்தேன்!
ஓர் பார்வையில், நினைவின் ஆழ்ந்த புரிதலில்
வாழ்ந்த நொடிகளின் பரிமாற்றம்!
இணைந்தது இறைவனின் மகத்துவம்
பூரணமானது வெறுமை! (7-5-2012)


ழான் லுய் - பிரசாந்தா
திருமண வாழ்த்து

இறையருள் விழைந்தே இணைத்த வாழ்வில்
மறைபொருள் யாவும் மனத்தே நிலைக்க,
இணையிலா பூவுல கின்பம் நுகர்ந்து
மனையறம் சிறக்க மாதவம் செய்தீர்!
பிரசாந் தாவெனும் பூங்கொடி படர
உறவென ழான்லுய் உறுதுணை நல்க,
கவினுறு சோலையின் கமழும் பூக்களாய்
புவிதனில் பெறுக பேரும் புகழும்!
சீரும் வளரும் செல்வமும் சூழ
ஊறும் உறவின் உவகையும் பெருக,
வற்றா நதியென வாகை சூடியே
இற்றை நாள்முதல் இனிதே வாழ்கவே!

கடல்

ஆழ்கடல் அமைதி கொள்ளும்
அழகதன் வடிவாய் மின்னும்
சூழ்உல காளும், உள்ளச்
சுடரதன் ஒளியே அள்ளும்!
தாழ்வெனும் போதில் தாங்கித்
தவழ்ந்திடும் அலையாய்த் தேற்றும்
வாழ்வதன் பொருளைக் கற்க
வாய்த்திடும் நிதியும் பெண்ணே!

உப்பெனக் கரைந்து, காதல்
உவகையில் கலப்பாள் தேனாய்
தப்பெனக் கண்டால் சீறிச்
சடுதியில் எழுவாள் பொங்கி!
இப்புவி தனிலே தாயே
இன்னமு தருளும் தெய்வம்
ஒப்பிட அவள்போல் நேரில்
உண்டெனில், கடலே அன்றோ!



மனிதம் மலரட்டும்
கருவறை தன்னின் கதவைச் சாத்தி
இருவர் தன்னலம் இன்பங் காணும்
மீறி வருமோர் மழலையின் வாழ்வு
மாறிப் போகும் மண்ணுக் குள்ளே!
குழலும் யாழும் கூட்டா ஒலியோ
விழலாய் வீணே விம்மி அடங்கும்
மனிதம் எங்கே மாண்பும் எங்கே
புனிதம் மறைந்தே போனதும் இங்கே!
சேர்த்த வங்கிச் செல்வம் நல்கி
பேர்தனை யறியாப் பெற்றவன் பிள்ளை
இன்னோர் தாயின் இடையில் தவழ
நன்னெறி இதுவோ நாளும் விந்தை!
ஒருவனுக் கென்று ஒருத்தி என்றே
உருகும் பாங்கில் ஊனம் இல்லை
நாற்றாய் பண்பை நடுக இன்றே
மாற்றுக உலகை மனிதம் மலரவே!




தணிகா சமரசம்

பொறுப்பாளர், கம்பன் பொருளாளர், காதல்
விருப்பாளர், நற்கவிதை வார்ப்பின் - உருவாளர்,
இல்வாழ்வின் காப்பாளர், இன்முக நட்பாளர்
பல்லாண்டு வாழ்க இனிது!

சிவஹரி

காற்றாடி ஆங்கே கருத்தொத்தக் காதலையே
ஆற்றாமை நீங்க அளித்திடவே, - சாற்றுகின்ற
பாங்கதனை நாதனும் பாய்விரித்தே சொல்லவந்த
ஓங்குமுயர் தொன்மை உறவு!

பல்லாண்டு வாழ்ந்திங்கு பல்சுவையும் கண்டிடவே
இல்ஆள்க என்றும் இனிது!

(விளம்-மா-தேமா)

நாளெலாம் சிரிப்பின் வண்ணம்
நாற்புறம் சிந்தும் வண்ணம்
தாளெலாம் பரமன் சின்னம்
தேடியே செல்லும் திண்ணம்
கோளெலாம் உண்டோ மின்னும்
கோமதி தருமோர் இன்பம்
தோளெலாம் உவகை துள்ளும்
தோழமை இருவர் உள்ளும்!

நற்றுணை கண்ட உள்ளம்
நாளுமே பெருமை கொள்ளும்
ஒற்றுமை உறவில் மிஞ்சும்
ஓங்கிடும் வலிமை தஞ்சம்
பொற்றமிழ் கவிதை நெஞ்சம்
நாடிடும் காதல் கொஞ்சும்
கற்றவர் பெறுக சீரே,
காலமே தருக பேறே!


அசோகன் வாழ்த்து
(மா-மா-காய்)

அமைதி சிந்தும் அழகுண்டு
அன்பில் பிறந்த உறவுண்டு
சமைந்த பண்பின் தெளிவுண்டு
சான்றாய் விளங்கும் குணமுண்டு
அமைந்த அறத்தின் வடிவுண்டு
அருகே இன்பத் துணையுண்டு
குமைந்த மனதில் கனிவுண்டு
குமரன் அருளும் நிலையுண்டு!

ஆழ்ந்த கல்வி அறிவுண்டு
அருமைச் சுற்றம் பலவுண்டு
சூழ்ந்த நண்பர் வலியுண்டு
சுகமே தருமோர் பலமுண்டு
தாழ்ந்தோர் துன்பம் நீக்குமொரு
தழைந்த குணமும் கிளர்ந்தோங்க
வாழ்ந்த நாளின் வளம்பெருகி
வளர்க, வாழ்க பல்லாண்டு!


நாற்காலி?!
(அகவல்)

நான்கு கால்கள் நாளும் கொண்டு
மேன்மை தருமோர் மாட்சியும் கொண்டேன்!
களைத்த உடலினைக் கருத்தாய்ப் பேணி
இளைத்த மூச்சினை இனிதாய் மாற்றி
சுற்றம் தருகிற சுகமும் தந்து
இற்றை நாளை இன்பமும் ஆக்குவேன்!
தளிர்போல் மேனி தழுவத் தூண்ட
குளிர்முக மதிலே குறுநகை மின்ன
காதல் என்னும் காவியம் பிறக்க
நாதம் போலே நானும் இசைந்து
உறவை வளர்ப்பேன் உண்மை களிப்பேன்!
பரிவும் எந்தன் பாசமும் அறியார்
புரிதலும் இல்லாப் புன்மை மாந்தர்!
இகத்தில் புன்னகை ஈனம் மறைக்க
புகழெனும் ஏணி பொய்யின் பகட்டாய்
பதவி சேர்க்கும், பணமும் பெருக்கும்
சதமிலா வாழ்வைச் சாதக மாக்கி
ஆணவம் கொண்டே ஆண்டிடச் செய்யும்
வீணர் கொள்ளும் வேட்கை என்றும்
நான்கு கால்களில் நன்றே அமர்ந்து
மூன்று உலகும் முற்றாய் அடைய!
இழிநிலைக் குறிக்கும் இப்பெயர் தவிர்த்து
விழிப்பாய் நானும் வேற்றுரு தரித்தேன்!
அன்பை, அன்னை அருளைக் கூட்டி
ஒன்றாய் அளிக்கும் உருவாய் மாறி,
கட்டில் ஆனேன், காலம் முழுதும்
கட்டி வைப்பேன் கனவிலும் உறவையே!

மீண்டும் ஒரு ஆசை
(4காய்-மா-தேமா)

மீண்டுமொருப் பிறப்பெடுக்க மறுபடியும் ஓராசை மனதில் தோன்ற,
மாண்டுவிட்ட உணர்வலைகள் மண்ணகத்தே ஆடிநின்று மாயைக் காட்ட,
தீண்டுகின்ற உள்ளத்தின் திசைகளிலே வண்ணமதைத் தீட்டி வைக்கச்,
சீண்டிவிடும் மெய்யின்பம் சீதளத்துச் சித்திரமாய்ச் சித்தம் சேரும்!

வாழ்க்கையெனும் நாடகமோ, வரிசையாக எத்தனைநாள் வாழ்ந்தபோதும்,
தாழ்வினிலும் பெறுகின்றத் தவிப்பினிலும் எஞ்சுகின்றத் தாபம் போதும்!
ஏழ்பிறவி என்கின்ற எழிலானக் கானல்தன் எச்சம் போலும்
ஊழ்வினையின் பயனாக உறுத்துகின்ற பிறவிவேண்டா உண்மை புகலும்!

மாறிவிட்ட நெஞ்சமதில் மாற்றுதேடி ஓரேக்கம் முளையும் விட்டே,
தேறிவிடும் இறைவனவன் தெவிட்டாத உறவொன்றில் தெளியும் மனமே!
சீறிவரும் புயலொத்த சீர்குலைக்கும் துன்பத்தைச் சீராய்த் தள்ளி,
ஊறிவிடும் உன்னதனின் உவகையிலே உன்மத்தம் உள்ள மட்டும்!


நான் முதலமைச்சரானால்

மெய்தவத்தால் இங்கேநான் முதலமைச்சர் ஆகிவிட்டால் என்ன செய்வேன்?
உய்யவொரு வாய்ப்பென்றே உவந்தேற்று, உப்பரிகை வாழ்வு கொள்வேன்!
செய்வினையாய்ச் சேர்த்துவைத்து, சேயிழைகள் சேவையினைச் சார்ந்து நிற்பேன்
கொய்கின்ற வாய்ச்சாலக் கொள்ளையிட்டு மக்களின்பம் காவு கொள்வேன்!

மனசாட்சி இல்லாத மன்றங்கள் உருவாக்கிச் சட்டம் கொல்வேன்
இனமழிய அன்னியர்க்கு இன்தமிழின் மாண்பினையே கப்பம் தந்து,
வனமொழித்து நாடெங்கும் வலம்வரவே வற்றாதச் சுற்றம் சேர்ப்பேன்
தனம்சேர்த்தும் மாளாத தாகத்தால் தன்நிறைவில் குற்றம் காண்பேன்!

தீண்டாதோர் குலமென்று திக்கெட்டும் தனித்தனியே தள்ளி வைப்பேன்
மாண்டோரை உயிர்ப்பித்து வாக்கெடுப்பு வாகையிலே தன்னை மறப்பேன்
வீண்பகையை நெருப்பினிலே வளர்க்கின்ற வகையினிலே மூட்டி வைப்பேன்
சாண்முழத்தில் நீதிதனைச் சாக்காட்டுக் கனுப்பிவிட்டு வேதம் சொல்வேன்

என்பெருமை பேசுமொரு இளங்காளை வேலையில்லாக் கூட்டம் சேர்ப்பேன்
இன்சிறப்பைப் பெற்றிடவே இல்லார்க்கு இல்லாமை என்றும் ஈந்தே,
நன்மக்கள் வாய்மூட நல்லுணர்வு தானழிய நாளும் செய்வேன்!
இன்றிருக்கும் இன்பநிலை என்கனவு, இதைவிடுத்து என்ன செய்வேன்?


மலரும் வண்டும்

இரைக்கென உயிர்கள் இரவும் பகலும்
உரைக்க இயலா ஒன்றிய உணர்வும்
தேடும் விழியும் தேர்ந்த முறையும்
நாடும் வழியும் நால்வகைக் கொண்டு
அல்லல் உறுவது அகில இயற்கை!
எல்லா இனமும் இயல்பென அறியும்
சின்ன மலரின் சிறுதேன் துளிகள்
வண்ண வண்டினை வலிந்து ஈர்க்கும்!
வாடும் மலராய் வனிதை அவளைக்
கூடும் வண்டாய்க் கோமகன் தன்னை
உருவகம் கொள்ள உவமை தந்தத்
தருணம் எதுவோ தர்மம் தானோ?
காதல் சுவையைக் காமப் பசியாய்
சாதல் மீறியச் சாதனை ஒன்றை
மாற்றிய தேனோ மாறும் உலகில்
ஆற்றும் செயலும் ஆணா திக்கமோ?!

நம்பிக்கை

தாய்விரலால் சாற்றுகின்ற தனியொருவன் பதமே
தான்பெற்ற பிறவிதனைத் தழைக்குமொரு ஊற்று,
சேய்கொள்ளும் நம்பிக்கை சேர்க்குமந்த உறவு
சோர்வகற்றி உள்ளமதில் செழித்திடுமே அன்பு.
காய்முற்றிக் கனிவதுபோல் கண்ணெதிரே வளரும்
கண்ணுறங்கும் வேளையிலும் கருத்தினிலே சுமக்கும்
வாய்நிறைந்த வாழ்த்தினிலே வாழ்ந்திடுமே பண்பு
வானுலகப் பேரின்பம் வந்திடுமே இங்கு!

வெண்ணிலவாம் பெண்ணவளே! விழி வெல்லும் உலகு!
விடிவெள்ளி வாழ்வுக்கு! வீசுமொரு தென்றல்!
கண்ணிரண்டில் சேர்த்துவைத்தக் கணைதாங்கி மெல்ல,
காளையவன் சோர்ந்துமனம் காலடியில் விழுவான்!
மண்தொடுமுன் அவள்தாங்கி மணம்சேர்ப்பாள் மனதில்
மாலையிட ஆவலுந்தும் மன்னவனின் அருகில்
பண்ணெழுப்பும் நம்பிக்கை பாவையவள் நெஞ்சில்
பாட்டிசையாய் கலந்திடுவாள் பாரினிலே உறவில்!

தனித்தியங்கும் மனமிருந்தும் தனிமையிலே வாழ்வு
தான்சுவைக்க வேண்டுமொரு சுற்றமுடன் நட்பு.
இனிமையுந்தான் வந்துசேரும் இங்கிதமாய் இங்கே
இம்மண்ணில் யார்பகைவர்? எல்லோரும் உற்றார்!
கனிமொழியும் காற்றாகக் கடுகிவரும் பந்தம்
கார்மேகத் துன்பமது கட்புலனில் பிந்தும்
இனியேனும் நம்பிக்கை இன்முகத்தில் கூட்டி
ஏற்றமிகு உறவினிலே இழைந்திடுவோம் நாளும்!

மாற்றமொன்றே நிகழுலகில் மாறாத ஒன்று
மாய்ப்பதுவும் பாழ்மனதை மாயையாக நின்று.
கூற்றுவனின் நாடகத்தால் கூடிவிடும் மன்றம்
கொட்டிவிட்டத் தௌ;ளமுதாய்க் கொள்ளைபோகும் இன்பம்!
பாற்கடலின் பரந்தாமன் பாதமதைப் பற்றப்
பறந்தோடும் படுந்துன்பம் பல்வினையும் முற்றும்
காற்றினிலே உயிர்கலக்கும் காலமுன்னே கொள்ளும்
கலையாத நம்பிக்கைக் கரையதிலே சேர்க்கும்!


ஊர்வலம்
(ஊர்வலம் மூன்று முறைகளில் முடிகிறது)


உருவில்லா இறையம்சம் உருதாங்கஇ மண்ணில்
உதிக்கின்ற தந்தையின் ஊனுடம்பில்இ கண்ணில்
மருவில்லா மாதரசி மனையாளின் காதல்
மணிவயிறு தானேகிஇ முத்தெனெவே கனிந்துஇ
கருவாகிஇ அவளன்பு கலந்திடவே செழித்துஇ
கண்ணாக வளர்ந்திங்கே காட்சியாய்இ அன்பின்
திருவாகிஇ வடிவாகிஇ தள்ளாடும் அழகில்
தேனாகி ஊர்வலமாய் திசைதோறும் அசையும்!


அசைகின்ற ஊர்வலத்தின் அழகினையே பனியாய்
ஆடிவரும் வேளையிலே அண்டிவிழும் திரையாய்
திசைமாற்றக் குவிந்துவிடும் திண்ணமது பொறியாய்
திகட்டிவிடும் கடமையும்இ தேர்ந்துவிடும் பொறுப்பும்!
தசைகாணும் அனுபவத்தின் தவறாதப் பரிசாய்
சேர்ந்துவிடும் பாரத்தில் சூழ்ந்துவிடும் தொய்வும்
மிசையேறும் கணமதிலே மீண்டுவந்த வழியில்
மீட்டுவந்த இன்பமென மிச்சமொன்றும் இல்லை!


ஊர்வலத்தின் சிறப்புக்கே ஊறுபோன்று மாசாய்
உவக்கவொண்ணா இடையூறாய் ஒருகோடி துன்பம்!
சீர்பெறா குணநலனும்இ சீரழிக்கும் ஆசையும்இ
சிறகடிக்க இயலாதத் தடையாகச் சுமையும்இ
பேர்தனையே நாடிபெறும் பெரும்சோர்வும் தளர்வும்
பிறரறியாப் போதினிலே பேரழிவைத் தருமே
ஊர்மெச்ச வாழ்கின்ற உன்னதமும் தனக்குள்
உண்டாக்கித் தந்திடுமே உண்மையிலே வெறுமை!


முடிந்துவிடும் ஊர்வலமும் முற்றாக ஒருநாள்
முனைந்தாலும் தொடர்ந்திடவே முடியாது போகும்!
இடிந்துவிடும் சுற்றத்தின் இணைந்துவிட்ட உறவும்இ
ஈட்டிவந்த செல்வத்தின் இங்கிதமும்இ சுகமும்!
விடிந்துவிடும் காலத்தை விழித்துணராச் சடமாய்
வீண்கனவாய் வாழ்வதுவும் வீழ்ச்சியிலே முடியும்!
கடிதன்றோ இதுவரையில் கண்டதுவும்இ உள்ளம்
கொண்டதுவும் நின்றிங்கே கனவெனவே சொல்ல!



அல்லது



இன்பமதை நாடியோடி இளைத்தநெஞ்சும் பஞ்சாய்
இனித்தொடர இயலாது ஏக்கத்தில் ஒடுங்கும்!
முன்செய்தத் தீவினையோ முந்திநிற்கும் கொஞ்சம்
மூண்டுவரும் இப்பிறவி மூப்பினிலே முடங்கும்!
பின்வருமோர் பொழுதினிலே பிரித்தறியாக் காரணத்தால்
பொன்போன்ற இவ்வாழ்வும் பொசிந்தொழுகி அடங்கும்!
முன்போல மீண்டுமது உருமாறி இறையில்
ஒன்றாகி முடியுமெனில் ஊர்வலமும் எதற்கோ!?




அல்லது



ஆண்டாண்டு கண்டசுகம் அருகினாலும்இ ஞானம்
ஆண்டுகொள்ளும் வெற்றிடத்தை! அரியவனை ஆன்மா
மீண்டுமொரு புதுப்பிறப்பாய் மெல்லெனவே கண்டுஇ
மிகுந்துவரும் உணர்வினிலே மீளவொண்ணா திணைந்து
தாண்டிவிடும் பரவுலகு! தனக்குள்ளே முனைந்து
தான்கொண்டப் புதுமையிலே தானென்ப தழிந்துஇ
காண்பதெல்லாம் அவன்செயலாய் கனிந்துவிடும் அன்பில்
கரைசேரும் ஊர்வலமும் கடந்தவனின் உறவில்!